அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தில் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்த மூதாட்டி - குடிக்க பணம் இல்லாததால் மூதாட்டியை கொன்று நகை திருடிய சிறுவன் உட்பட இருவர் கைது திருக்கிடும் தகவல்கள்
மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் அருகே காந்திகிராமத்தை சேர்ந்தவர் பாண்டியன். (67). முன்னாள் ராணுவ வீரர். இவரது மனைவி காந்திமதி (62). இவர்களுக்கு பிள்ளைகள் இல்லை. கடந்து 10 வருடங்களுக்கு முன் பாண்டியன் இறந்துவிட காந்திமதி கணவரின் ஓய்வூதிய தொகையை வைத்து தனியாக வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டில் உள்பக்க அறையில் காந்திமதி மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் அலங்காநல்லூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். பின்னர் விரைந்து வந்த அலங்காநல்லூர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை செய்தனர். மேலும் கைரேகை நிபுணர்களும், மோப்ப நாயும் வரவழைக்கப்பட்டு வீடுகள் முழுவதும், அக்கம் பக்கத்திலும் ஆய்வு செய்யப்பட்டது. மோப்பநாய் சிறிது தூரம் ஓடிச் சென்று நின்றுவிட்டது. தொடர்ந்து மதுரை சரக டி.ஐ.ஜி பொன்னி, மாவட்ட எஸ்.பி சிவப்பிரசாத், சமயநல்லூர் டி.எஸ்.பி பாலசுந்தரம் மற்றும் போலீசார் சம்பவ இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து மர்ம மரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தினர்.
போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இறந்து கிடந்த காந்திமதியின் கழுத்து பகுதியில் காயங்கள் இருப்பதால் வீட்டில் தனியாக இருக்கும் பெண்ணை நோட்டமிட்டு நகை பணத்திற்காக இந்த கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர். குற்றவாளிகளை பிடிக்க காவல் ஆய்வாளர் சங்கர் கடன் தலைமையில் இரண்டு தனிப்படை அமைக்கப்பட்டது. போலீசாரின் தீவிர விசாரணையில் அதே ஊரைச் சேர்ந்த முத்துராஜா (20) மற்றும் 16 வயது சிறுவன் ஆகிய இரண்டு பேரும் சேர்ந்து மது குடிப்பதற்கு பணம் இல்லாததால் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை நோட்டமிட்டு நள்ளிரவில் வீடு புகுந்து தலையணையை அமுக்கி கொன்று மூதாட்டி அணிந்திருந்த 5 பவுன் தங்கச் செயின், இரண்டு ஜோடி தோடு மற்றும் இரண்டு மோதிரம் ஆகியவற்றை திருடி சென்றது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது. திருடப்பட்ட பொருட்கள் அனைத்தையும் மீட்ட போலீசார் இருவரையும் கைது செய்தனர்.
கொலை நடந்த நான்கு மணி நேரத்தில் துரிதமாக செயல்பட்டு குற்றவாளிகளை பிடித்த தனிப்படையினரை தென் மண்டல ஐ.ஜி அஷ்ரா கார்க் வெகுவாக பாராட்டினார். பொதுமக்கள் அதிகம் நடமாடும் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டி நகைக்காக கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதியது பழையவை

தொடர்பு படிவம்